
எனக்கு உங்களை போல் சுற்றி வளைத்து பேசவோ, சூட்சுமம் வைத்து பேசவோ முடியவில்லை. நேரடியாக வெந்நீர்பட்ட கொப்பளமாய் வெடிக்கிறேன்.
ஒரு காலத்தில் யாரும், இரவு நேரத்தில் வரப்பயந்த, பேய் வீடு என்று செல்லப்பெயர் கொண்டு நீங்கள் என்னை வதைத்த, அந்த, அதே வேப்பமரம் நான் தான். கொஞ்சநாளாய் மனசு சரியில்லை. நிறைய சொல்ல நினைக்கிறன். உயிருள்ள மட்டும் உங்களுடன் நான் உள்ளவை உள்ளபடியே..
ஏதோ ஒரு பறவை போட்ட எச்சத்தில் விழுந்த விதையாகத்தான் நான் இருக்க வேண்டும். ஏனெனில் என் அருகில் அம்மாவோ, அப்பாவோ இருக்கவில்லை நான் அறிந்தவரை. ஆண்டவன் புண்ணியத்தில் அடிக்கடி பெய்த மழையாலும், அற்புதமான மனிதர்களாலும் ஆள் ஆனேன். ஒவ்வொரு நிலவிலும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு விதமான வித்தை காட்டி உணவூட்டும் அன்புத்தாய்மார், என் பூ பூமி தொடுமுன்பே கையேந்தி கைப்பற்றும் கன்னியர்கள், உழைத்து களைத்து வந்து காலாற களைப்புத்தீர்க்கும் காளைகள், மாலைவேளை மாய்ந்து போன கதைகளுக்கு உயிரூட்டி உசுப்பேற்றும் வயோதிபர்கள். தினம் இவர்கள் வாழ்வில் என் வளர்ச்சி வசந்தமாயிருந்தது.
திடீர் திருப்பம், காகம் கரைய மறுத்த கலிகாலத்தின் மற்றுமொரு கரிகாலம் அது. கொஞ்ச நாளாக அந்த பழைய மனிதர்களை காணவில்லை. என்ன ஆனதோ புரியவுமில்லை.
சில நாள் நிசப்தத்தின் பின் மனிதர்கள் வந்தார்கள். ஆனால் அவர்கள் பழையவர்கள் அல்லர். கைகளில் கனரக ஆயுதங்கள், கண்களில் கருணை சற்றுமில்லை. அடிக்கடி யாரையோ பிடித்து வருவார்கள். என்னில் கட்டி வைப்பார்கள். என் விரல் ஒடித்து அவன் விரல் ஒடியும் வரை, விடியும் வரை அடிப்பார்கள். வீறிட்டு அவன் அழுத அழுகையில், அவன் அந்நியன் என்று மட்டும் புரிந்தது. பீறிட்டு பாய்ந்த இரத்தம் கண்டு, என் காள்கள் கூட கண்ணீர் வடித்ததுண்டு. இவர்கள் காதுகளில் காளான்களும், கண்களில் கறையான்களும் களியாட்டம் நடத்துகின்றனவோ? யாமறியோம், புலன் இருந்தும் புழுக்களாக இவர்கள்...
நான்கு நாட்களில் அவன் நாதியற்றுப்போவான். அதுவே அவனின் கடைசித்தேதி. கழுத்தில் கயிறு கட்டி என் கரங்களில் கட்டித் தூக்குவார்கள். கழுகுகள் கண்கள் கொத்த, நாய்கள் அண்ணாந்து ஆவென்று ஊளையிடும்.
என் தலைகள் வெள்ளையடிக்கப்படும் - எச்சங்களால், என் செவிப்பறைகள் கிழிக்கப்படும் - ஓலங்களால், தலை குனிந்து நிலை குலைந்து காத்திருப்பேன் மற்றுமொரு மழைக்கால குளியலுக்காய்.
நாட்கள் பல நகர்ந்தும் நாடகம் முடிவதாக இல்லை. அழுதவர்கள் அடிப்பதும், அடித்தவர்கள் அழுவதும் அலையலையான அத்தியாயங்கள் இங்கே. அழுகைகளும், அத்தியாயங்களும் பல, மொழிகள் மட்டும் இரண்டு.
அழுக்குகள் அதிகமானால், அழுகைகள் அடங்கமறுத்தால் என் கரம் களைந்து வேள்வி நடத்துவார்கள். வெப்பத்தில் என் கூந்தல் கருகிப்போகும், காயங்கள் அனலாக கொதிக்கும், காட்டெருமைகள் குளிர் காயும், எரிய மறுத்த மண்டை ஓடுகளும், தீயின் தீர்வாக சாம்பலும் காலையின் காட்சிகளாகும்.
புளித்து புழுத்துப்போன மனதோடு, மனசாட்சியிருந்தும் சாட்சி சொல்ல முடியா வாயில்லா ஜீவனாய் வாழப்பிடிக்காமல், மரணத்தை மகிழ்ச்சியோடு கைப்பிடிக்கவிருந்த அந்தக்கணம்; இரண்டு ஒலிபெருக்கிகள் என் தோள்மேல். கடைசி வார்த்தை கேட்கும் ஆசையில் மரணத்தை ஒத்திப்போட்டேன். போர்கள் போதிய காலத்திற்கு போர்த்தி வைக்கப்பட்டுள்ளதாக போதிக்கப்பட்டது.
உச்சி முதல் உள்ளங்கால் வரை உடல் குளிர்ந்து போனது. உணர்ச்சி வசப்பட்டு உடல் சிலிர்த்ததில் நாலைந்து மயிர்கள் உதிர்ந்து போனது. என் தவிப்புக்கு கிடைத்த தவப்பரிசாக இறைவனுக்கு நன்றி சொன்னேன். நாய்களும், நாடகங்களும் அற்று, நல்ல காற்றுக்காக நாசி தாவும் நேரம்;
மீண்டும் மனிதர்கள் மிருகத்தனமாக ஒருவனை தாக்கிக்கொண்டேயிருந்தார்கள். ஆனால் இது சற்று வித்தியாசம். அடித்தவர்களும் அழுதவர்களும் அந்நியர்களும் அல்லர். அதட்டல்களும் அலறல்களும் ஒரே மொழியில்...
பகுத்தறிவற்ற எனக்கே ஒன்று மட்டும் புரிந்தது. மனிதர்கள் அடிப்பதிலே குறியாக இருப்பார்கள், அடிவாங்க ஆட்கள் இல்லையெனில் தம்மைத்தாமேனும் அடித்திக் கொள்வார்கள். மாய்வதற்கு முன்பே சாய்த்துக் கொண்டிருகிறார்கள் மற்றுமொரு போருக்காக என்னை, ஓய்வதற்கு முன் ஓரளவுக்கு பிதற்றிய மகிழ்ச்சியில் நான்..