அடிக்கடி
ஆந்தைக்கண்கள் - அங்கே
அலை மோதும்.
ஆளரவமற்ற - ஆனால்
அடையாளம் தெரியா,
ஆட்கள் ஆர்ப்பரிக்கும்
அனலின் அரங்கம்.
அது
இரத்தவண்ண பிரதேசம்.
இது
இதிகாசத்தில் இல்லாத
இலக்கணப்பெயர் - ஆனால்
இலக்கியம் சொல்லும்
இருள் பிரதேசம்.
முற்றத்தின் முருங்கைகளாய்
முத்திரை பதித்த மூத்தவர் சிலர் - இதன்
முகவரி கேட்டே
மூக்குச்சிந்தி
முகம் சுளிப்பர்.
விபச்சாரம்
அபச்சாரம் என்பர்.
குப்பைகளில்
குமட்டும் வாசனையில்
குற்றுயிராய்த்துடிக்கும்
புழுக்களாய்
காறி உமிழ்வர்.
குதர்க்கம் பேசி - அவள்
குடும்பத்துக்கு
நடுத்தெருவில்
மடு அமைப்பர்.
சமரசம் பேசின்
மூன்றறிவுள்ள முதலையாய் - எமை
முட்டி மோதுவர்.
அவள்
விபச்சாரி.
வடிகால்கள் அமைத்தே
வடிநிலமாய் போனவள்.
காமத்தின் கரங்களுக்கு
கட்டுப்போட்டவள்,
ஆசைகளின் முறுக்குகளை
தளர்த்தி விட்டவள்,
அறியாதவைகள் அனைத்தும்
அற்பமென உணரச்செய்தவள்.
உங்கள்
சகோதரிகளின் கற்பை
காமுகர்களின் கரங்களிலிருந்து
காப்பாற்றியவள்.
தூக்குக்கயிறுகளுக்கும்
தேக்குமர ஆவிகளுக்கும்
விடை கொடுத்தவள்.
கழுத்தின் கயிற்றுக்காய்
கூண்டுகளில்
மண்டியிட்டுக்கிடப்பவர்கள் - ஒருபோதும்
கண்ணீர் விட்டதில்லை;
கற்பழித்தவர்களைத் தவிர.
காமத்தின் உச்சத்தில்
காரணம் தெரியாது
காரியம் செய்தவன்
அவன்.
அவன் ஓமோன்கள் ஒழிந்தோட
ஓடைகள் அங்கில்லை.
குளமுடைத்து
குடிமனை மூழ்கவே செய்யும்.
வாய்க்கால்கள்
வரையப்படும் வரை
வயல்களின் களைகளுக்கோ,
வரம்புகளின் வழுக்கல்களுக்கோ
விமோசனம் இல்லை.
உங்கள்
அத்துமீறல்களாலும்
அரக்க குணங்களாலும்;
உங்களாலே படைக்கப்பட்ட
அவளை;
இனியாவது
இன்பமாய் வாழவிடுங்கள்.
உங்கள்
இடிப்புகளுக்கும் - அவள்
துடிப்புகளுக்கும் - மன
வெடிப்புகளுக்கும்
விடுதலை கொடுங்கள்.
அவளை
அங்கீகரியுங்கள்.
இல்லையேல் .....
விபச்சாரம் இல்லாத
விந்தை உலகம்
அபத்தமாய் இருக்கும்.
அது அப்பாவி பெண்களை
அடிக்கடி அழவைத்து
வேடிக்கை பார்க்கும்.
என் கண்கள்
கனவுகளுக்கு களவு போகும்
நேரங்களில் கூட - உன்
உணர்வுகளை
உதிர்த்திக்கொண்டவன்
நீ.
அர்த்த ராத்திரியின்
நிர்வாண உடலில் - என்
பழைய அழகின்
அடிவாரத்தையும் - காணாது
தோற்றுப்போகிறாய்.
வரிகொண்ட வயிறும்
பெருத்த உடலும்
உன்னை - அடிக்கடி
சலிப்பூட்டுவதாய் சஞ்சலப்படுகிறாய்.
ஊரெங்கும் உள்ள
உன் - குழந்தைகளை
உறுதிப்படுத்த
உண்மைத்தடம் இல்லையென்று - நீ
பெருமை கொள்ளலாம்.
பாவங்களில்
பாதியும்
பங்குகொள்ளாது
பார்வையாளனாயிருக்கும் - உன்
நாடகம் நன்றாயிருக்கிறது.
அடிக்கடி
அலங்காரங்களை
அகற்றிக்கொள்ள
ஆண்டவன் - உனக்குத்தான்
அவகாசம் கொடுத்திருக்கிறான்.
என்றுமே மாறாத
கர்ப்பத்தின்
கடந்த இரவுகளுக்காக
கருணையற்ற
கடவுளை
கடிந்து கொள்கிறேன்.
உன்
உணர்வுகளின் அவசரத்துக்காகவே
உதிராத்தடயங்களை
உதரத்தில்
உரித்தாக்கிக்கொண்டவள்
நான்.
கற்பையும், களங்கத்தையும்
கட்டுரைகளில் மட்டுமே
கண்டவன்
நீ.
உன்
தேவைகளின்
தேடல்களின் முடிவில் - என்
விம்மல்களுக்கும், அழுகைகளுக்கும்
விடையளிக்காது போனவன்
நீ.
ஒவ்வொரு விடியலும் - உன்
ஆசைகளின் அஸ்த்தமனத்திலும்
ஒவ்வொரு அஸ்த்தமனமும் - என்
வியர்வையின் விடியலிலும்
தொடங்குகிறது.
நீயோ
பலநூறு குறுந்தொடர்களில்
நடிகனாய் உள்ள போது,
நானோ - அதே
தொடர் நாடகத்தில் - என்
பிள்ளைகளின் பிற்காலத்துக்காய்....
(கவிதை மீண்டும் முதலில் இருந்து)
தலை குனிந்து நின்ற போதும்
தலைக்கனம் என்று கூறி,
தூவப்பட்ட கற்களால்
தூள் தூளாயிருக்கும் - நம்
வீதியோர விளக்குகள்
விடிந்து பார்க்கையிலே.
உண்மை எதுவெனில் - அவை
சாமத்து சம்பவங்களுக்கு
சாட்சியங்களாய் இருந்தவை.

#
கை தொட முடியா உச்சி மரமும், கால் மிதிக்கும் நெடுந்தடியாய் - ஆற்றின் குறுக்கே.#
முகில்கள் முட்டி மலைகள் அழுகிறது - மனசு.
# மலைகளின் மடுக்களில் மண்குடிசைகள் - நம்பிக்கை என்பது சரியாது.
# குடிசை வீட்டு குப்பி விளக்கு கும்மிருட்டிலும் - நாளைய வெளிச்சத்துக்காய்..
# ஆடாத தலைகளையே ஆடவைக்கும், தானாடாது - புகைவண்டி.
# காவி நிறத்தில் கண்ணாடிக்குடுவை ; உள்ளே இருப்பது தேநீரா, தெளி நீரா? - தெருவோரக்குழந்தை.
# நவக்கிரகங்களுக்கு நாலு சுவர் இல்லாதது நானும் நீயும் எதிர் எதிரே ....
# நீல வானம், வெண் மேகம், கரு காகம் - எதுவும் தனித்து அழகில்லை.
# அருவியின் அழகு தினமொரு வண்ணம்; யாருக்கு தெரியும் அத்தனையும் அழுக்கு என்று.
# புலியும் சிங்கமும் எலியின் வாலில் - பட்டம்.
# இணையாமல் சுழல்கிற இரு சக்கரங்கள் - பணம் , குணம். அசையாமல் தவிக்குது வண்டி - பூமி.
# தலைவர்கள் வருகை குப்பை தொட்டிகளுக்கு - சுவர் ஒட்டிகளில்.
# இலைகளே அற்ற கிளைகளில் பூக்கள் - கொக்குகள்.